Header Ads

ஜெ.,ஜாமின் மனுவை நிராகரித்தார் நீதிபதி; நொடிப்பொழுதில் அதிரடி மாற்றம்; மகிழ்ச்சி- அதிர்ச்சி- கவலை

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெ.,வுக்கு இன்று மதியம் ஜாமின் கிடைத்தததாக தகவல் பரவியது. ஆனால் நீதிபதி தனது உத்தரவில் திடீர் அதிரடியாக ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமின் வழங்க முடியாது என தனது உத்தரவை பிறப்பித்தார். 

இன்று பரபரப்பான விவாதம் காலை முதல் நடந்து கொண்டிருந்தது. காலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெ.,வுக்கு நிபந்தனை ஜாமின் வழங்குவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக அனைத்து வக்கீல்களும், கோர்ட்டுக்கு வெளியே வந்து கூறினர். இதனையடுத்து இந்த செய்தி அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. பல மீடியாக்களிலும் ஜாமின் வழங்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அ,தி.மு.,கவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பல இடங்களில் இனிப்பு வழங்கப்பட்டது. 

தொடர்ந்து சில நிமிடங்களில் நீதிபதி சந்திரசேகராவின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார், இந்த உத்தரவில் அரசு தரப்பு வழக்கறிஞர் நோ அப்ஜக்ட் செய்தாலும் , குற்றவாளிகளை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட்டுக்கு விருப்பமில்லை. அரசு வக்கீல் நிலை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஜெ., உள்ளிட்ட 4 பேரும் பெரும் ஊழல் குற்றம் புரிந்துள்ளனர். லாலுகூட பல நாட்கள் சிறையில் இருந்து தான் ஜாமின் வழங்கப்பட்டது. மனித உரிமைகளுக்கு ஊழல் எதிரானது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. இவர்களுக்கு கருணை காட்ட முடியாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

சாதாரண குற்றவாளிகள் அல்ல: நீதிபதி சந்திரசேகரா தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: 



கைதிகளை வெளியிட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என்று முதலில் கூறிய அரசு வக்கீல் திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டது வேடிக்கையாக உள்ளது. இதில் இருந்தே இது உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது. இந்த வழக்கில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. நீதிபதி குன்ஹா தெளிவான தீர்ப்பளித்துள்ளார். ஊழல் என்பது பொருளாதாரத்தை முடக்கும் குற்றம் ஆகும். இவர்கள் சாதாரண குற்றவாளிகள் அல்ல. இது போன்ற குற்றவாளிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் பல வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அவசரமாக ஜாமின் வழங்க வேண்டிய அவசியமில்லை. மேலும் ஜாமின் வழங்குவதற்கு உரிய முகாந்திரம் ஏதும் இல்லை. லாலு பிரசாத் பல மாதங்கள் சிறையில் இருந்த பின்னரே சுப்ரீம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். இதனால் இவர்களை ஜாமினில் விடுவிக்க முடியாது . இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். 







சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம்: ஜெத்மலானி ; ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம். என ராம்ஜெத்மலானி கூறினார்.



இன்றைய ஜாமின் மனு விசாரணையில் , உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டிஜெ., வுக்கு ஜாமின் வழங்குங்கள் ; என பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி தனது வாதுரையில் எடுத்துரைத்தார். தொடர்ந்து அவர் வாதிடுகையில், இந்த வழக்கில் சாட்சிகள் ஜெ.,வுக்கு ஆதரவாகத்தான் சாட்சியம் அளித்துள்ளனர். ஆனால் சிறப்பு கோர்ட் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறானது. ஊழல் தடுப்பு சட்டத்தின் படி முறையான விசாரணை நடக்கவில்லை. ஜெ.,தரப்பில் உள்ள ஆதாரங்களை சரியாக வழங்காமல் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை நிறுத்தி வையுங்கள். ஜாமின் உடடியாக வழங்குங்கள் . இவருக்கு ஜாமின் வழங்காத பட்சத்தில் தமிழகத்தில் பதட்டம் நீடிக்கும். ஜெ.,வுக்கு ஆயுள் தண்டனையோ, மரணத்தண்டனையோ விதிக்கப்படவில்லை. இவர் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இதனால் ஜாமின் வழங்குவதில் தவறு இல்லை. என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டினார். 


அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானிசிங், தனது வாதுரையில், மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெ., பல கோடி சொத்துக்களை குவித்துள்ளார். இது சட்டப்படி குற்றம் ஆகும். இது தொடர்பாக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. இவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டால் சாட்சியங்களை கலைப்பதுடன் , அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்துவார். எனவே இவரை ஜாமினில் விடுவிக்க முடியாது. 


இதற்கு குறுக்கிட்ட ஜெத்மலானி, 17 ஆண்டுகள் வழக்கு நடந்துள்ளது. இதுவரை அவர் எந்தவொரு தவறான வழியிலும் ஈடுபடவில்லை. 2 முறை முதல்வராக இருந்துள்ளார். எந்தவொரு தவறான வழியிலும் ஈடுபடவில்லை. எங்கும் ஓடவில்லை. அரசியல் சூழ்ச்சி காரணமாக வழக்கு போடப்பட்டுள்ளது. என்றார்.

No comments:

Powered by Blogger.