Header Ads

நித்யானந்தா மீது பெண் சீடர் தொடர்ந்த கற்பழிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26–ந் தேதிக்கு ஒத்திவைப்பு

பெண் சீடர் தொடர்ந்த கற்பழிப்பு வழக்கில் ராமநகர் கோர்ட்டில் நித்யானந்தா சாமியார் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 26–ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கற்பழிப்பு வழக்கு 

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடத்தில் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் முன்னாள் சீடரான ஆர்த்திராவ் என்பவர் நித்யானந்தா மீது பிடதி போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதன்பேரில், பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். பின்னர் சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனையும், மடிவாளாவில் குரல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. அந்த அறிக்கைகளை கடந்த 15–ந் தேதி ராமநகர் செசன்சு கோர்ட்டில் சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். அன்றைய தினம் வழக்கு விசாரணையை 27–ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

நவம்பர் 26–ந் தேதிக்கு ஒத்திவைப்பு 

அதன்படி, ராமநகர் மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி ஒசகவுடர் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா சாமியார் தனது சீடர்களுடனும், போலீஸ் பாதுகாப்புடனும் காலை கோர்ட்டுக்கு வந்து நீதிபதி முன் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 26–ந் தேதிக்கு நீதிபதி ஒசகவுடர் ஒத்திவைத்தார்.

மேலும், பெண் சீடர் ஆர்த்திராவ் தொடர்ந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனு மீதான விசாரணையையும் நவம்பர் 26–ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். இதைத்தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் இருந்து நித்யானந்தா சாமியார் தனது சீடர்களுடன் புறப்பட்டு சென்றார்.

No comments:

Powered by Blogger.