Header Ads

அன்புடன் அந்தரங்கம்!

மதிப்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு,
என் வயது, 38; என் கணவரின் வயது, 50. எங்களுக்கு திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்; பெரிய பெண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், சிறிய பெண் பத்தாம் வகுப்பும் படிக்கின்றனர்.
என் கணவர் காவல் துறையில் பணியாற்றுகிறார். தற்போது அவர், ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து, குடும்பத்தை கவனிக்காததுடன் வீட்டிற்கும் சரியாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் எங்களை வார்த்தையாலும், செயலாலும் சித்ரவதை செய்கிறார். அப்பெண்ணுக்கு அடிமையாகி விட்டார். அவர் அலுவலக உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தப்பயனும் இல்லை. 'இம்மாவட்டத்தில் இருந்தால் தான் தொடர்பு நீடிக்கிறது; அதனால், வெளிமாவட்டத்திற்கு மாறுதல் செய்யுங்கள்...' என்று அதிகாரியிடம் கேட்டும் பயன் இல்லை. 50 வயதான என் கணவரின் நடவடிக்கை, மிகமோசமாக உள்ளது. 25 வயது இளைஞனைப் போல் அவளை நினைத்து உருகுவதும், பார்க்க ஓடுவதும், அந்தப் பெண்ணிற்கு பாதுகாவலாக செல்வதையும் காண சகிக்கவில்லை.
வீட்டில் வயதுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர் என்ற நினைவு இல்லாமல், தனிக்காட்டு ராஜா போல் இருக்கிறார். இது எனக்கே வேதனை அளிக்கிறது என்றால், பெண் பிள்ளைகள் எவ்வளவு பாதிக்கப்படுவர்.
எங்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட சட்டபூர்வமான திருமணம்; இப்படி இருக்கும் போதே எனக்கு இந்த நிலை. அழகான மனைவி, அருமையான இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தும், ஏன் என் கணவரின் மனம் இந்த வயதில் இப்படி அலை பாய்கிறது. அவர் திருந்துவாரா... அதற்கு வாய்ப்புண்டா அல்லது பெண் மயக்கம் என்பது மனநோயா?
சகோதரி... என் நலன் கருதியும், பிள்ளைகளின் நலன் கருதியும், நல்லதொரு பதிலையும், எங்களுக்கு தைரியத்தை கொடுக்கும்படியான உங்களின் வார்த்தைக்காக காத்திருக்கும், உங்கள் அன்பு சகோதரி.
பின்குறிப்பு: விவாகரத்து என்ற வார்த்தையை உங்கள் பதிலில் குறிப்பிட வேண்டாம்; அதை மனதாலும் தாங்க முடியாது.

அன்புள்ள சகோதரிக்கு,
உன் கணவர் எப்போதுமே இம்மாதிரி சபலப் புத்திக்காரரா இல்லை இப்போது தான் இத்தகைய தொடர்பில் உள்ளவரா? ஏன் என்றால், மலருக்கு மலர்தாவும் வண்டைப் போல், பல மலர்களை தேடி ஓடும் குணம் உன் கணவரிடம் இருந்தால், அவர்களை திருத்த முடியாது; திருந்தவும் மாட்டார்கள். மது மயக்கத்தை போல் பெண் மயக்கமும் அவ்வளவு எளிதில் மீண்டு வர முடியாத நரகம். ஒன்று, அவர்களுடைய மனைவி சகித்துப் போக வேண்டும் இல்லை விவாகரத்து வாங்கி விலகிப் போக வேண்டும்.
ஆனால், உன் கடித்ததை படிக்கையில் உன் கணவர் பரம்பரை சபலக்காரன் அல்ல; பஞ்சத்திற்கு சபலவயப்பட்டவர் என்றே தெரிகிறது. அதனால் தான், இந்த பகிரங்க ஆட்டம். அவரை இப்படி ஆடவைத்ததில் உனக்கும் பங்குண்டு. எப்போது உனக்கு தெரிய வருமோ என பயந்து, பம்பி திரை மறைவில் தன் தர்பாரை அரங்கேற்றிக் கொண்டிருந்த உன் கணவனுக்கு, நீ சிந்திய கண்ணீரும், சண்டையும், மேலதிகாரிகளிடம் செய்த முறையீடும், பயந்தை போக்கி, தைரியத்தையும், ஊக்கத்தையும் கொடுத்து விட்டது. 
அதனால் தான், 'நீ செய்வதை செய்து கொள்; நான் இப்படித்தான் இருப்பேன்...' என்பது போல் நடந்து கொள்கிறார். இந்த விஷயத்தை மனசுக்குள்ளே வைத்து மறுகி கொண்டிருக்காமல், இரு வீட்டு பெரியவர்களின் காதில் போட்டு வை; அவர்கள் கூப்பிட்டு அறிவுரை கூறி கண்டித்து வைப்பர். அதற்கும் அடங்கவில்லை என்றால், உன் கணவனின் ஆசை நாயகியிடம், நைச்சியமாக பேசிப் பார். அவள் நல்லவள் என்றால், அடுத்தவளின் கண்ணீரைக் குடித்து, தன் தாகத்தை தணித்துக் கொள்ள விரும்ப மாட்டாள்.
இதுவும் சரிப்படவில்லை என்றால் விட்டுத் தள்ளு... காடு மேடெல்லாம் மாடு மேயப் போனாலும், கடைசியில் கொட்டடிக்குத் தான் திரும்பும்! 50 வயசு ஆணின் சபல ஆட்டம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்? ஷுகரோ, பிரஷரோ வந்தால் கசாப்பு கடைக்கு போகும் தொத்த மாடுபோல் பரிதாபமாக உன்னிடம் தான் வர வேண்டும்; கவலைப்படாதே!
இது எல்லாவற்றிக்கும் மேலாக, உடலும், அறிவும் முதிர்ந்த ஆணையோ, பெண்ணையோ அடக்குமுறையால் கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மையை நீ, தெரிந்து கொள்ள வேண்டும். உன்னிடம் என்ன குறை உள்ளது என, உன்னை சுய பரிசோதனை செய்து கொள். 
இதுவரை, 'நமக்குத் தான் கல்யாணம் ஆகி, குழந்தை பிறந்து விட்டதே இனி என்ன அலங்காரம் வேண்டிக் கிடக்கு...' என, வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் கசங்கிய உடையும், எண்ணெய் வழியும் முகமாய் இருப்பதும், சின்ன சின்ன விஷயத்திற்கு கூட சிடுசிடுப்பதும், சாப்பிடும் நேரத்தில், வீட்டு பிரச்னைகளை சொல்ல ஆரம்பிப்பது போன்ற தவறுகளை செய்திருந்தால், உன்னை மாற்றிக் கொள். 
மிதமான அலங்காரத்துடன் எப்போதும், உன்னை, 'பளீச்' என வைத்துக் கொள். வீட்டிற்கு வரும் கணவனிடம், அவரின் குறைகளையும், பிரச்னைகளையும் மட்டுமே பெரிதுபடுத்தி பேசாமல், பலதரப்பட்ட பொது விஷயங்களை பேசு. உனக்கு பேசத் தெரியவில்லை என்றால் அவர் பேசுவதை கேள். எப்போதும் கணவனானப்பட்டவனிடம் வரவு, செலவு கணக்கையும், பிரச்னையை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால், வீடு என்பது தூங்குவதற்கான இடம் என்பதாகி விடும். பின், மகிழ்ச்சிக்காக, சந்தோஷமாக பொழுதைக் கழிக்க வீட்டிற்கு வெளியே தான் தேடத் துவங்குவர்.
மகளே...நான்கு சுவர்களுக்குள் இரு உடல்கள் கூடும் சங்கமத்தால் மட்டும் ஒரு இல்லறம் மகிழ்ச்சியானதாகி விடாது. இனிமையான சம்பாஷனைகள் தான், அதை இன்னும் உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்கும். 
நீ, உன் கணவனிடம் உட்கார்ந்து மனம் விட்டு பேசு; உன் அன்பை, வார்த்தைகளால் வெளிப்படுத்து. 'ஐ லவ் யூ' என்ற வார்த்தை காதலர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; தம்பதிகளும் அதை அடிக்கடி சொல்லலாம்.
இறுதியாக ஒன்று... 'இல்லானை இல்லாளும் நேசியாள்' என்பார் அவ்வையார். பொருள் இல்லாதவனை பொண்டாட்டியே நேசிக்க மாட்டாள் எனும் போது, கள்ளக் காதலி, காசு இல்லாதவனை ஒரு போதும் நேசிக்கவோ, போஷிக்கவோ மாட்டாள். அதனால், உன் பிள்ளைகளை வைத்து, அது வாங்க வேண்டும்; இது வாங்க வேண்டும் என, வரவுக்கு மேல் பொய்யான செலவுகளை சொல்ல வை. எந்த தகப்பனும், பிள்ளைக்கு கட்டுப்பட்டவனாகத்தான் இருப்பான். 
அந்த ஆயுதத்தை வைத்து, உன் கணவனின் கையில் பணப் புழக்கம் இல்லாதவாறு செய்து விடு; உன் கணவனின் காதல் சதிராட்டம் அடங்கிவிடும்.
— என்றென்றும் தாய்மையுடன் 
சகுந்தலா கோபிநாத்.

No comments:

Powered by Blogger.