Header Ads

வன்முறையில் 2 பஸ்கள் எரிப்பு; 63 பஸ்கள் சேதம்: பஸ்கள் ஓடத் துவங்கியும் பயணிகள் இல்லை

தமிழகத்தில் திடீரென வெடித்த வன்முறையில், இரண்டு அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், 63 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. 53 இடங்களில் ரயில் மறியல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று, பஸ்கள் இயக்கம் படிப்படியாக துவங்கிய போதிலும், பதற்றம் காரணமாக பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் தண்டனை வழங்கப்பட்டதும், தமிழகம் முழுவதும், பஸ் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு, வாகன மறியல் என, வன்முறை வெடித்தது. இதனால், பஸ் போக்கு வரத்து முழுமையாக முடங்கியது.சென்னை கோயம்பேடு, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களில், பயணிகள் விடிய விடிய காத்துக் கிடந்தனர்.இந்நிலையில், தமிழகத்தில் நேற்றும் பதற்றம் நிலவியதை அடுத்து, தமிழகத்திற்கு வரும், கர்நாடக மாநில பஸ்கள் முழுமையாக நிறுத்தப்பட்டன. மாலையில் மட்டும் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன.


தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட்டன. வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமையில், 65 சதவீத மாநகர பஸ்கள் மட்டுமே சென்னையில் இயங்கும். நேற்று அதிகாலை, சூழல் தெரியாததால், 30 முதல் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பகல், 9:00 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கம் வழக்கம் போல் துவங்கியது.இருப்பினும், விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில், அரசு பஸ் எரிக்கப்பட்டது. இதனால், தென் மாவட்டங்களில் பதற்றம் நீடித்தது.திருநெல்வேலியில் இருந்து, 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. போலீசாரின் அறிவுறுத்தல்படியே, நாகர்கோவில் மண்டலத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், தென் மாவட்டங்களில், பஸ்கள் இன்றி பயணிகள் தவிப்பிற்கு ஆளாகினர்.மற்ற இடங்களில், படிப்படியாக பஸ்கள் இயங்கத் துவங்கிய போதிலும், பயணிகளின் வருகை மிகக் குறைவாகவே இருந்தது. இதனால், பெரும்பாலான பஸ்கள், 10க்கும் குறைவான பயணிகளுடன் பயணித்தன. தமிழகம் முழுவதும், ஆம்னி பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

No comments:

Powered by Blogger.