Header Ads

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவிற்கு — 
மகள் எழுதும் கடிதம். அம்மா என் வயது, 28; கணவர் வயது, 42. நான் ஏழாம் வகுப்பு படித்து முடித்த நிலையில், என் அத்தை, தன் பையனுக்கு பெண் கேட்டு வந்தார். என் அப்பா படித்து முடிக்கட்டும் என்று சொல்லியும் கேட்காமல், 'உன் மகள் வயதிற்கு வந்து ஆறு மாதம் ஆகி விட்டதே... அதனால், இப்போதே
பெண்ணை கட்டிக் கொடு...' என்று, வற்புறுத்தினார். அதனால், திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத வயதில், எனக்கு திருமணம் நடந்தது. கணவர் கோபக்காரர்; சிரிப்பு என்றால், என்னவென்றே தெரியாதது போல, எப்போதும் முகத்தை இறுக்கமாக வைத்திருப்பார். நான் மிகவும் கலகலப்பாக இருப்பேன். எனக்கு முதலிரவு என்பது, ஒரு பாலியல் பலாத்காரம் போன்று தான் நடந்தது. ஒவ்வொரு முறையும் அருகில் வர விடவில்லை என்றால், என்னை அடித்து, துன்புறுத்தி, தன் ஆசையை தீர்த்து கொள்வார் என் கணவர்.
எனக்கு, 1௪ வயது மற்றும் 1௬ வயதுகளில், இரு பெண் குழந்தைகளும், 18 வயதில், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. உடனே, குடும்பக் கட்டுப்பாடும் செய்து கொண்டேன். மூன்று குழந்தைகளையும், அறுவை சிகிச்சை செய்து தான் எடுத்தனர். இதனால், என் உடல், மிக மோசமான நிலைக்கு போனது. ஆனாலும், வீட்டில் இருக்க பிடிக்காமல், தனியார் நிறுவனத்தில் எடுபிடியாக, 4,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிகிறேன். என் கணவர், சுய தொழில் செய்கிறார். திருமணமான புதிதிலிருந்தே, என் கணவர் நான் ஏதாவது கேட்டாலே, 'நிறுத்துடி...' என்று, கத்துவார். அது, என் மனதை மிகவும் பாதித்து விட்டது.
இதனால், நான் பணிபுரிகிற இடத்திலோ அல்லது பொது இடத்திலோ யாராவது அதட்டி பேசினால், என்னால், தாங்க முடியாது. உடனே அழுது விடுவேன் அல்லது பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடும். இந்நிலையில், இன்னொரு அத்தை மகன், அவருக்கு வயது, 32; சிறு வயதிலேயிருந்தே கூட பழகியவர். அவருக்கு, அப்போது வராத காதல், இப்போது என்னிடம் வந்திருக்கிறது. முதலில் அவர் காதலை மறுத்தாலும் பின், அவர் காட்டிய அன்பும், பாசமும் என்னை, அவர் வலையில் விழ வைத்து விட்டது.
அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்து கொள்ள சொன்னால், 'உன்னை விட்டு போக மாட்டேன்...' என்கிறார். பலமுறை நெருக்கமாக இருந்துள்ளோம். என் கணவரிடம் கிடைக்காத அன்பும், பாசமும், என் கள்ளக்காதலனிடம் கிடைத்தது. நான் செய்வது தவறு என்பது, எனக்கு நன்றாகவே தெரிகிறது. சமுதாயத்தில், எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அது, இப்போது சீர்குலைந்து விடும் போல் உள்ளது.
என் தந்தைக்கு தெரிந்தால், என்னை கொன்று விடுவார். இது குறித்து, என் காதலனிடம் சொன்னால், 'உன் மூன்று குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து, திருமணம் செய்து, அவர்களை வாழ்க்கையில் செட்டில் செய்த பின், என்னிடம் வா... அதுவரை காத்திருக்கிறேன்...' என்கிறார்.
அம்மா நான் என்ன செய்வது என, நீங்கள் தான் அறிவுரை சொல்ல வேண்டும்.
 இப்படிக்கு,
உங்கள் மகள்.

அன்புள்ள மகளுக்கு —
மும்மத குறியீடுகளையும் துவகத்தில் வரைந்த உன் கடிதம் கிடைத்தது; உன் மத நல்லிணக்க உணர்வு, என் மனதை வருடியது.
பால்ய விவாகங்கள், இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு, உன் திருமணமே சாட்சி. 12வயது குழந்தையாக இருந்த போது, உன்னை விட, 14வயது பெரிய அத்தை மகனுக்கு, வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து இருக்கின்றனர். ௧௪வயது மற்றும் ௧௬, ௧௮ வயதுகளில் வரிசையாக மூன்று குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்திருக்கிறாய். 18 வயதிலேயே கிழிந்த, நைந்த சேலை ஆகியிருக்கிறாய்.
உன் கணவன், உன்னிடம் இன்முகம் காட்டி, நல்ல வார்த்தைகள் பேசியதில்லை; தாம்பத்யம் என்ற பெயரில், தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அவருக்கு சமைத்து கொடுத்து, ஆடைகளை துவைத்து போட்டு, சம்பளமில்லாத வேலைக்காரியாய் பணி புரிந்திருக்கிறாய்.
கட்டின கணவரால் சிறிதும் சுகப்படாது, வெந்து, நொந்து போயிருந்த உன் வாழ்வில், இன்னொரு அத்தை மகன், தென்றலாய் புகுந்திருக்கிறார். ஆனாலும் மகளே...
இந்த திருமண பந்தம் மீறிய உன் உறவு, உன் கோபக்கார கணவருக்கு தெரிந்தால், என்னவாகும் என்று யோசித்துப் பார்த்தாயா... கோபத்தில் ஏதாவது நடக்கக் கூடாதது நடந்து விட்டால், உன் மூன்று குழந்தைகளும் தான் நடுத்தெருவில் நிற்பர். இரு பெண் குழந்தைகளின் படிப்பும், எதிர்கால வாழ்வும் கெடும். அவர்கள் இருவரும் உன்னை விட மோசமான வாழ்வு வாழ்வர்.
'உன் மூன்று குழந்தைகளையும் வளர்த்து, ஆளாக்கி, வாழ்க்கையில் செட்டில் செய்து விட்டு வா... அதுவரை 
திருமணம் செய்து கொள்ளாமல் காத்திருக்கிறேன்...' என்று, உன் காதலன் கூறியதாக எழுதியிருக்கிறாய். இதில், சிறிதும் யதார்த்தம் இல்லை. சீரியல் மற்றும் சினிமா வசனம் போல் உள்ளது உன் காதலனின் பேச்சு.
உன் மூன்று குழந்தைகளின் வாழ்க்கையை செட்டில் செய்ய இன்னும், 12 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும். அப்போது, உன் வயது, 40 அல்லது 43 ஆகியிருக்கும். அதுவரை, உன் காதலன் திருமணம் செய்யாமல், பிற மகளிர் தொடர்பில்லாமல், உனக்காக காத்திருப்பானா... உடல் தேவைக்காக இல்லாவிட்டாலும், குடும்ப நிர்பந்தத்துக்காவது, உன் காதலன், இன்னும் ஒரு ஆண்டில், யாரையாவது திருமணம் செய்து கொள்வார். தனக்கென ஒருத்தி வந்ததும், பால்ய வயது கூட்டுக்காரி முற்றிலும் மறந்து போகும். 
அப்படியே உன் காதலன் காத்திருக்கிறான் என வைத்துக் கொள்வோம்... அப்போது, உன் கணவனை விவாகரத்து செய்வாயா... தன் தகப்பனாரை விவாகரத்து செய்து, இந்த வயதில் தாய், தன் காதலனை மணக்கிறாள் என்பதை, உன் வளர்ந்த பிள்ளைகள் ஏற்றுக் கொள்வரா... 
சமுதாயத்தில் உனக்கு நல்ல மதிப்பு இருப்பதாக கூறியிருக்கிறாயே... இப்படி உன் வாழ்வு தடம் மாறிப் போனால், 'காலம் போன கடைசியில இவ புத்தி போன போக்கை பார்... ' என, அனைவரும் எள்ளி நகையாடி, கை கொட்டி சிரிக்க மாட்டார்கள்! இதனால், உன் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீட்டு மனிதர்களும், உன் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு எத்தனை அவமானம் நேரிடும். 
உன் காதலன் போகாத ஊருக்கு வழி சொல்கிறான்; அதைத் தூக்கி குப்பையில் போடு!
கையில் இருக்கும் களாக்காயை விட்டு, எப்போதோ கிடைக்கப் போகும் பலாக்காயிற்கு கனவு காணாமல் நிதர்சனத்துக்கு வா... மூன்று குழந்தைகளுக்கு தாயான நீ, உன் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை மட்டும் சிந்தனை செய்; எல்லாக் குழந்தைகளுமே, தங்கள் பெற்றோரிடம் இருந்து தான், தங்கள் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்கின்றனர். அதனால், உன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து, திருமண பந்தம் மீறிய, இந்த கள்ள உறவிற்கு ஒரு பெரிய குட்பை சொல்.
சிறுபிராயத்து விளையாட்டு தோழனான அத்தை மகனை காலா காலத்தில், ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து, வாழ்க்கையில் செட்டிலாக சொல். உன் சுயநலத்துக்காக அவன் வாழ்க்கையை பாழாக்கி விடாதே!
உன்னுடைய விருப்பங்களை கணவரிடம் நிதானமாக கூறி, அவரை உன் வழிக்கு திருப்பப்பார். போஷாக்கான உணவு 
சாப்பிட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து. கணவனிடம் சூசகமாய், உன் வலி, வேதனைகளை கூறி, உன் கஷ்டங்களை உணர வை. சில கணவன்மார்கள், தங்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது, தங்கள் முன்கோபத்தை தொலைத்து, அந்திம காலத்தில் மனைவியின் அருமையை உணர்ந்து, மதிப்பர்.
யார் கண்டது? 30 வயதுக்கு மேல், நீ உன் கணவருடன் புதிய இணக்கமான தாம்பத்யம் நடத்தினாலும் நடத்துவாய்.
 என்றென்றும் தாய்மையுடன் 
சகுந்தலா கோபிநாத்.

No comments:

Powered by Blogger.