Header Ads

தலைவரின் களப் பணியை கடைசியில் சாதித்த “பிரிகேடியர் ரமேசின்” வெளிவரா முக்கிய தகவல்கள் ..

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார்!!
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார்
கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா -தளபதி ரமேஸ் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தளபதியாக பணியாற்றியிருந்தார்.
சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கடந்த வாரம் ஒரு முக்கிய திருப்பத்தை தந்துள்ளது.
சிறீலங்கா அரச தலைவரின் பிரித்தானியா பயணம், அவரை கைதுசெய்வதற்கு முயன்ற பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு கைகொடுத்த பிரித்தானியா ஊடகங்கள், தமிழ் மக்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகம் என்பன பல செய்திகளை எமக்கு கூறிச் சென்றுள்ளன.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், அங்கு மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்குலகம் தமிழ் மக்களுடன் நிற்கும் என்பது உறுதியானது. பிரித்தானியா சம்பவம் மட்டுமல்லாது, அண்மையில் வெளியாகிய விக்கிலீக்ஸ் இணையத்தள ஆவணங்களும் அதனை தான் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆனால் அதனை வலுப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பில் புலம்பெயர் தமிழ் சமூகம் உள்ளது. அதனை நாம் தவறவிட முடியாது. தமது உயிர்களை கொடுத்து போராளிகளும், தமிழ் மக்களும் இந்த வழியை எமக்கு திறந்துவிட்டுள்ளனர். அதனை நாம் தவறவிட முடியாது.
அண்மையில் பிரித்தானியா ஊடகங்கள் வெளியிட்ட காணொளி ஆணவத்தில் காணப்படும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கட்டளைத்தளபதி பிரிகேடியர் ரமேசுக்கு கொடுக்கப்பட்ட பணியும் அது தான். அதாவது இறுதிக்கட்டச் சமரின் போது விடுதலைப்புலிகள் வகுத்த உத்திகள் என்பது சிறீலங்கா அரசை போர்க்குற்றங்களில் சிக்கவைப்பதை முதன்மைப்படுத்தியதாகவே இருந்தது.
1987 களில் சிறீலங்காவுக்குள் வந்திறங்கிய இந்திய அமைதிகாக்கும் படையினர் காந்தியின் விம்பங்களை முகமூடிகளாக அணிந்து, அமைதியின் சின்னங்களாக தம்மை காண்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன, அவர்களின் ஜனநாய செயற்பாடுகள் என்ன? ஜனநாயக போராட்டங்களுக்கு காந்தி தேசம் கொடுக்கும் மதிப்பு என்ன? காந்தீயம் தற்போதும் இந்தியாவில் உயிர்வாழ்கின்றதா? என்பதற்கான விடைகளை தியாகதீபம் திலீபனின் உண்ணாநிலை போராட்டம் வெளிக்கொண்டுவந்திருந்தது.
நீர் கூட அருந்தாது போரடிய திலீபன் துடி துடித்து உயிரைத்துறந்து இந்தியாவின் ஜனநாயக முகமூடியை தகர்த்திருந்தார். அன்று திலீபன் மேற்கொண்ட முதல் தகர்ப்புத் தான் பின்னர் விடுதலைப்புலிகளின் போரை இலகுவாக்கியதுடன், தமிழ் மக்களை விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளவும் வைத்திருந்தது.
தமிழ் மக்களின் விடுதலைப்போரை நகர்த்துவதில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தியாகங்களில் பல அற்புதங்கள் உண்டு. உலகில் யாரும் அதற்கு இணையாக முடியாது. நல்லூர் முதல் ஜெனீவா வரை அதன் சுவடுகளை நாம் காணலாம். அது வரலாறும் கூட.
பிரிகேடியர்; ரமேஸ் இன் மரணமும் திலீபனின் மரணம் போன்றதே, தான் அவமானப்படுத்தப்பட்டு, கோரமாக கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார் தளபதி ரமேஸ்.
கடந்த வருடம் மே 18 ஆம் நாள் அதிகாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த இளநிலை தளபதிகள் இருவர் தமது இறுதிநேர தொலைபேசி அழைப்புக்களை எடுத்திருந்தனர். அந்த அழைப்பின் முடிவில் அவர்கள் கூறியது இது தான். “எமக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள், அதேபோலவே போராட்டத்தை தொடருங்கள்” “நாம் சயனைட் சாப்பிட்டு வீரமரணத்தை தழுவ திட்டமிட்டுள்ளோம்” “புலிகளின் தாயகம் தமிழீழ தாயகம்” இந்த வசனங்களுக்கு பின்னர் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
இன்று வரை அவர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை, எனவே அவர்கள் சயனைட் சாப்பிட்டு வீரமரணத்தை தழுவியிருக்கலாம். இதனை ஏன் இங்கு தெரிவிக்கிறேன் என்றால், அதேபோல தன்னிடம் இருந்த சயனைட்டை உட்கொண்டு உயிரை விடுவதற்கு பிரிகேடியர்; ரமேஸ் இற்கு பத்து நொடிகள் போதுமானது.
எனினும் தலைமையின் கட்டளையை அவர் மீறவில்லை, காயமடைந்த பெருமளவான போராளிகளை சரணடைய வைத்து, அவர்களின் பாதுகாப்பை அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டர் அமைப்புக்கள் மூலம் உறுதிப்படுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவருக்கு உதவியாக விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் திரு பா நடேசனும், சமாதானச் செயலாகப் பணிப்பாளர் திரு சி புலித்தேவனும் அனுப்பப்பட்டிருந்தனர்.
காயமடைந்த போராளிகளுக்கு பொறுப்பாக சென்றவர்களும், காயமடைந்த போராளிகளும், சரணடைந்த ஏனைய போராளிகளும் படுகொலை செய்யப்பட்டால் அதனை போர்க்குற்றமாக கொண்டுவரும் நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவிக்கப்பட்டது, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாரின் கவனத்திற்கும் சரணடையும் நிகழ்வுகள் கொண்டுவரப்பட்டன. ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிநிதி பாலித கோகன்னாவிடமும் அது தெரிவிக்கப்பட்டு, பசில் ராஜபக்சா ஊடாக சரணடையும் நடைமுறைகள் கேட்டறியப்பட்டன.
தமிழ்தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சரணடையும் நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டன. கொழும்பில் உள்ள வெளிநாடுகளின், குறிப்பாக மேற்குலகத்தின் தூதரகங்களுக்கும் அவை தெரியப்படுத்தப்பட்டன. பிரித்தானியாவில் உள்ள த ரைம்ஸ் நாளேட்டின் ஊடகவிலாளருக்கும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் வழங்கப்பட்டன.
அதன்பின்னர் தான் சரணடையும் நிகழ்வுகள் இடம்பெற்றன. சரணடைந்த போராளிகளும், காயமடைந்த போராளிகளும் கோரமாக படுகொலை செய்யப்பட்டனர், திரு பா நடேசனும், அவரின் மனைவியும், சி. புலித்தேவனும் சரணடையும்போதே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார். சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு அமைவாக 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா இந்த படுகொலைகளை தலைமை தாங்கி மேற்கொண்டிருந்தார்.
அது மட்டுமல்லாது முள்ளிவாய்க்கால் பகுதியை சுற்றிவளைத்து நின்ற, 53 ஆவது படையணி, 59 ஆவது படையணி, 55 ஆவது படையணி, நடவடிக்கை படையணி எட்டு உட்பட பல சிறப்பு படையணி பிரிவுகளும் தம்மிடம் நாற்புறமும் சரணடைந்த போராளிகளையும், பொதுமக்களையும் கோரமாக படுகொலை செய்தனர்.
நாலாவது ஈழப்போர் என்பது இறுதிப்போர் எனவும், அதில் 50,000 இற்கு மேற்பட்ட மக்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்யலாம் எனவும் விடுதலைப்புலிகள் முன்னரே எதிர்வுகூறியிருந்தனர்.
ஆனால் அவர்களின் கணிப்புக்கள் இது தான் என்பதை யாரும் கணிப்பிடவில்லை. எனினும் தமது கணிப்புக்களை உறுதிப்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகள் சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலையாக வெளி உலகிற்கு கொண்டுவரும் நடவடிக்கைகளையே முதன்மைப்படுத்தியிருந்தனர்.
சிறீலங்கா அரசிடம் சரணடைபவர்களுக்கு என்ன நடைபெறும் என்பதை தனது மரணத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் பிரிகேடியர்; ரமேஸ். அவரின் தியாகமும் திலீபனின் தியாகத்தை போன்றதே.
ஆனால் தனக்கு மிகவும் அவமானமானதும், கோரமானதுமான மரணம் சம்பவிக்கும் என்பதை அறிந்தும், என்ன நோக்கத்திற்காக பிரிகேடியர் ரமேஸ் சரணடைந்து மரணத்தை தழுவினாரோ அந்த நோகத்தை நிறைவேற்றும் முதல் அடியை பிரித்தானியா தமிழ் மக்கள் எடுத்து வைத்துள்ளனர். அவர்களுக்கான ஆதரவுகளை உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.
உரிய நேரத்தில் இந்த ஆதாரங்களை வெளியிட்ட உலகத்தமிழர் பேரவை, பிரித்தானியா தமிழ் மக்களின் போராட்டங்களை ஒருங்கிணைத்த பிரித்தானியா தமிழர் பேரவை, தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கிய பிரித்தானியா ஊடகங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியதே எம்முன் தற்போதுள்ள முதல் பணி என்பதுடன், அதற்கான தடைக்கற்களும் அகற்றப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஸ் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதற்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
தளபதி ரமேஸிடம் விசாரணை செய்து படுகொலை செய்யப்படும் வீடியோ காட்சி ஏற்கெனவே வெளியாகி இருந்தன.
அதில் ரமேஷ்., விடுதலைப் புலிகளின் சீருடை இருக்கும் காட்சியும் அதன் பின்னர் முதுகில் உள்ள காயத்துக்கு போடப்பட்டிருந்த கட்டை பிரிப்பது, பின்னர் இலங்கை படையின் சீருடையை அணியச் செய்வது, விசாரணை நடத்துவது, கடைசியில் கோரமாக அடித்தும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்வதும் என புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
படுகொலை செய்யப்பட்டு தரையில் கிடத்தப்பட்டுள்ள தளபதி ரமேஷின் உடலை கட்டையில் வைத்த நிலையில் ஒரு படமும், பின்னர் எரிக்கப்படுகிற புகைப்படத்தையும் “கர்னல் ரமேஷின் மரணம்” என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டுள்ளது.
மேலும் கர்னல் ரமேஷிடம் விசாரணை நடத்தும் இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரது இருப்பிடம் குறித்த கேள்விகளையே கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.