கணவர் உள்பட கொடூர கும்பலால் பெண் கற்பழிப்பு
பிலாய் போர்கேடி கிராமம், மத்திய பிரதேசம்,
மத்தியபிரதேச மாநிலத்தில் கணவர் உள்பட 10 பேர் கொண்ட கொடூர கும்பலால் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவம் நாடு எங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்திலும் ஒரு கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மாநிலத்தின் பிலாய் போர்கேடி கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பழங்குடியின பெண் ஒருவர் கணவர் உள்பட 10 பேர் கொண்ட கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே நிலவிவகாரம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. அந்த பெண்ணை கொடூர கணவன் கோடாரியால் வெட்டியுள்ளான். இதில் காயம் அடைந்த பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் தனது மகனுடன் அருகே உள்ள கிராமத்தில் தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து சமாதானமாகிவிடுவோம் என்று கூறி அந்த கணவன், தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளான். அதனை உண்மை என்று நம்பி தனது மகனுடன் அந்த பெண்ணும் கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது கணவன் உள்பட 10 பேர் அந்த பெண்ணை கயிறால் கட்டி ஒரு அறையில் அடைத்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தண்ணீர் கேட்டுள்ளார். அந்த மனிதாபிமானமற்ற கொடூர கும்பல் மனித சிறுநீரை குடிக்க வற்புறுத்தியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை அரைநிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 10 பேரையும் போலீசார் கற்பழிப்பு குற்றத்தில் கைது செய்துள்ளனர். "கணவரின் வீட்டில் 3 நாட்கள் அடைத்துவைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார் என்றும் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும்” போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பெண்ணின் கணவன் கற்பழிப்பு குற்றத்தை மறுத்துள்ளார். நான் அடிக்க மட்டும்தான் செய்தேன் என்று கூறியுள்ளான். மத்திய பிரதேசம் மாநில குற்ற கட்டுப்பாட்டு குழு புள்ளி விவரங்களின்படி மாநிலத்தில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 4335 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: