Header Ads

27 பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது

திண்டுக்கல், ஜூன். 16–

திண்டுக்கல் மாசிலாமணி புரம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் பொன்சிபி (வயது21). இவர் மீது மதுரை ஆனையூர் முடக்கத்தான் சாலையை சேர்ந்த சந்திரமோகன் மகள் ரெஜினா(24) திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:–

நான் பி.காம். பட்டதாரி. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் எனது அக்கா வீட்டிற்கு அடிக்கடி வருவேன். அவ்வாறு வந்த போது பொன்சிபி ஒருமுறை என்னை பின்தொடர்ந்தார். நான் அவரை கண்டு கொள்ளவில்லை.

இருந்தபோதும் தொடர்ந்து என்னை பின் தொடர்ந்து வந்து காதலிப்பதாக தெரிவித்தார். நான் மறுத்தபோது பிளேடால் கையை அறுத்துகொண்டு நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன் என்று கண்ணீர்விட்டு கதறினார். என் மனம் மாறி அவரை காதலிக்க தொடங்கினேன்.

தாயாரிடம் அறிமுகம் செய்து வைப்பதற்காக என்னை அவரது வீட்டிற்கு வரவழைத்தார். வீட்டிற்கு சென்றவுடன் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து என்னை கற்பழித்தார்.

சுயநினைவு திரும்பியவுடன் எனது வாழ்க்கையை இப்படி நாசமாக்கிவிட்டாயே என்று கேட்டபோது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளத்தானே போகிறோம் என்று சமாதானம் செய்தார்.

சில நாட்கள் கழித்து மீண்டும் என்னை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்தார். நான் வர மறுத்தபோது ஏற்கனவே என்னிடம் உல்லாசமாக இருந்ததை ஆபாச படம் எடுத்து வைத்திருப்பதாக கூறி மிரட்டினார்.

இதனால் என்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினேன். இருவீட்டாருக்கும் தெரியாமல் கடந்த 30.5.2013–ம் தேதி திண்டுக்கல் பெருமாள் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணத்திற்கு பிறகு 3 மாதங்கள் பொன்சிபியின் வீட்டில் வாழ்ந்து வந்தேன். எங்கள் திருமணம் அவரது தாய் ஹேமமாலினிக்கு தெரிய வரவே என்னை வீட்டை விட்டு விரட்டிவிடும்படி பொன்சிபியிடம் கூறினார்.

இதனால் என்னை பொன்சிபி கொடுமைப்படுத்த தொடங்கினார். எனது வீட்டில் இருந்து வாங்கி வந்த 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் பறித்து வைத்துக்கொண்டனர். மேலும் நகை–பணம் வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தினர்.

இதுமட்டுமின்றி பொன்சிபி தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வந்து மது அருந்துவார். இதனை தட்டி கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எப்படியாவது என்னை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பொன்சிபியும், அவரது நண்பர்களும் குறியாக இருந்தனர்.

ஒருமுறை எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் மட்டையால் என்னை தாக்கியதில் என் வயிற்றில் இருந்த 3 மாத கரு கலைந்தது. இனிமேல் இங்கிருந்தால் என் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்து வீட்டைவிட்டு வெளியேறினேன்.

தற்போது எனக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதால் எனக்கு உயிர் பாதுகாப்பு அளிக்கவேண்டும், என்னை ஏமாற்றிய பொன்சிபி மற்றும் அவரது தாய் ஹேமமாலினி, உறவினர் ராஜா என்ற ஞானராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

போலீஸ் விசாரணையில் சிபி பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பிளஸ்–2 வரை மட்டுமே படித்த பொன்சிபி அதன்பிறகு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். பார்ப்பதற்கு வசீகர தோற்றமும், சினிமா கதாநாயகன் போன்ற உருவமும், கொண்டதால் இவரது காதல் வலையில் ஏராளமான பெண்கள் வீழ்ந்துள்ளனர்.

முதலில் பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களை வீட்டிற்கு வரவழைத்து பின்னர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர்களை ஆபாச படம் எடுத்து நண்பர்களுக்கு காட்டியுள்ளார்.

மேலும் இதனை வெளியூர்களுக்கும் விற்று வந்துள்ளார்.

மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டிற்கு நண்பர்கள் மட்டுமே வந்து செல்வார்களாம். தாய் வெளியூரில் வசித்து வருகிறார். மாதந்தோறும் மகனுக்கு ரூ.50 ஆயிரம் செலவுக்கு பணம் அனுப்பிவிடுவார்.

அந்த பணத்தை வைத்துக் கொண்டு கல்லூரிக்கு செல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றுவது, பெண்களை மயக்கி படம் எடுப்பது, இரவு நேரங்களில் பார்களில் மது அருந்துவது போன்ற ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இவரது காதல் வலையில் பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் வீழ்ந்துள்ளனர். இதில் பலர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால் நமக்குத்தான் அவமானம் என்று நினைத்து விலகிவிட்டனர்.

சிலர் பணத்திற்காகவும் இவரிடம் அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் தனது மன்மத விளையாட்டை தொடர்ந்து காட்டிவந்து 27–க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் வாழ்க்கையுடன் பொன்சிபி விளையாடி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதால் நண்பர்களுடன் இதுபோன்ற காமவிளையாட்டுகளில் ஈடுபட்டு வந்த பொன்சிபி மீது தைரியமாக ரெஜினா புகார் தெரிவித்தபோது போலீசார் அதனை வாங்க மறுத்தனர்.

அதன்பிறகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்து மாதர் சங்க அமைப்பிடம் தனது நிலையை எடுத்துக்கூறவே திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 13–ந் தேதி வழக்குபதிவு செய்யப்பட்டது.

போலீசார் பொன்சிபி, அவரது தாய் ஹேமமாலினி, ஞானராஜ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்தனர். பொன்சிபி மீது மட்டும் 498ஏ, 294பி, 406, 417, 506(1), பெண் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

போலீசார் தேடி வருவதை அறிந்ததும் தலைமறைவு வாழ்க்கை வாழ தொடங்கினார். கரூரில் பொன்சிபி தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அங்கு விரைந்தபோது கரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.