நண்பரின் மனைவியை காரில் கடத்தி வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை
தண்டையார்பேட்டை: கொத்தவால்சாவடி, ஆதியப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்தவர் கிஷோர் (30). தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர், எதிர் வீட்டில் வசிக்கும் பங்கஜ். இவர், அடிக்கடி கிஷோர் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அப்போது, கிஷோரின் மனைவி கீதாவுடன் (25) பங்கஜுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன், கீதா திடீரென மாயமானார். பங்கஜையும் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கிஷோர், பல இடங்களில் தேடியும் அவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து, கொத்தவால்சாவடி போலீசில், கிஷோர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான கீதா குறித்து விசாரித்து வந்தனர்.
அப்போது, கொண்டிதோப்பு, பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கீதா இருப்பது தெரிந்தது. போலீசார், அங்கு சென்று கீதாவை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதில், பங்கஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர், தன்னை காரில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கீதா தெரிவித்தார். இதை தொடர்ந்து, இளம்பெண்ணை கடத்தி கொடுமை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பங்கஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
No comments: