Header Ads

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண்ணை அடித்து கொன்றுவிட்டு கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகளின் கண் முன்னே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

கள்ளத்தொடர்பு

தாவணகெரே மாவட்டம் ஹரிகர் தாலுகா கட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணா(வயது 37). இவருடைய மனைவி கீதா(32). இவர்களுக்கு சிவு என்ற மகனும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையில், கீதாவுக்கு வேறு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி நாராயணாவுக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஆனாலும் கீதா, அந்த நபருடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என்று தெரிகிறது. இதனால் நேற்று  நாராயணாவுக்கும், கீதாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது.

பெண் அடித்து கொலை

உடனே ஆத்திரமடைந்த நாராயணா தன்னுடைய குழந்தைகள் சிவு, லட்சுமி கண் முன்பே மனைவி கீதாவை அடித்து, உதைத்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த கீதா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பின்னர் வீட்டின் மற்றொரு அறைக்கு சென்ற நாராயணா, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று கணவன், மனைவி உடலை கைப்பற்றி விசாரித்தனர். தங்களது பெற்றோரின் உடலை பார்த்து 2 குழந்தைகளும் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து ஹரிகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.