Header Ads

நடிகை ராதாவுடன் பைசூல் மோதல்: பெண் வக்கீல் புகாரில் சிறையில் அடைப்பு..

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழில் அதிபர் பைசூல் மீது பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தன்னை காதலித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த பைசூல், திருமணம் செய்ய மறுப்பதாகவும், பணமோசடி செய்து விட்டதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக வட பழனி உதவி கமிஷனராக இருந்த ஜெயசுப்பிரமணியன் விசாரணை நடத்தினார். 

இந்த விசாரணையின் போது, போலீசார் மீதும் ராதா பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார். நான் கொடுத்த புகார் மீது சரியாக விசாரணை நடத்தாமல் இழுத்தடிக்கிறார்கள் என்று கூறி, பல முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அவர் முறையிட்டார். பைசூலை கைது செய்யும் வரை நான் ஓயப்போவ தில்லை என்று கூறினார். 

இது தொடர்பாக அடிக்கடி பேட்டி அளித்த ராதா, பைசூல் மீது அடுக்கடுக்கான புகார்களையும் தெரிவித்த வண்ணம் இருந்தார். இதன் காரணமாக போலீசாரும் திணறிப் போனார்கள். இந்நிலையில் வழக்கு விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சென்ற ராதா, பைசூல் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக எழுதிக் கொடுத்து விட்டு வேகமாக காரில் ஏறி சென்றார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, ‘‘என்னதான் இருந்தாலும் பைசூல் எனது கணவர் தானே, எத்தனை நாள் தான் அவர் தலைமறைவாக இருப்பார்’’ என்றார். இப்படி யாரும் எதிர் பாராத வகையில் திடீரென பல்டி அடித்து புகார் மனுவை வாபஸ் பெற்ற ராதா சில நாட்களிலேயே மீண்டும் அந்தர் பல்டி அடித்தார். 

திடீரென ஒரு நாள் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த அவர், ‘‘பைசூல் என்னை மிரட்டினார், அதனால் வேறு வழியில்லாமல் நான் புகாரை வாபஸ் பெற்றேன். எனவே, பைசூல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கண்ணீர் வடித்தார். இதன் பின்னர் ராதா– பைசூல் விவகாரம் ‘பைசல்’ செய்யப்பட்டது போல, அடங்கிப்போனது. 

இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று திருவல்லிக் கேணியில் திடீரென மோதலில் ஈடுபட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விவரம் வருமாறு:– 

தொழில் அதிபர் பைசூல் திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் மார்கரெட் என்ற பெண் வக்கீல் லீசுக்கு குடியிருந்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக நேற்று மாலை ராதா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பைசூல், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

ராதாவை வீட்டுக்குள் விடாமல் நடுரோட்டில் வைத்து, பைசூல் மோதலில் ஈடுபட்டு தகராறு செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்த வக்கீல் மார்கரெட் வெளியில் வந்தார். என்னை பார்க்க வந்த ராதாவை நீங்கள் எப்படி தடுக்கலாம்? என்று கேட்டுள்ளார். இதனால் பைசூல், அவரிடமும் தகராறு செய்து அவதூறான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார். 

இது பற்றி, மார்கரெட் திருவல்லிக்கேணி போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் பீர்முகமது, இன்ஸ் பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். ஆபாசமான வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் பைசூல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராதா கொடுத்த புகாரில் முன் ஜாமீன் பெற்று தப்பிய பைசூல், நேற்று பெண் வக்கீல் மார்கரெட் கொடுத்த புகாரின் பேரில் கைதாகி சிறை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பைசூலுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வக்கீல் மார்கரெட்டுடன், நடிகை ராதாவும் போலீஸ் நிலையத்துக்கு சென்றிருந்தார். அவர் தனியாக புகார் எதுவும் கொடுக்க வில்லை.

No comments:

Powered by Blogger.