சென்னைக்கு படையெடுக்கும் வெளிமாநில அழகிகள்: 4 மாதத்தில் 125 பெண்கள் மீட்பு
சென்னையில் விபசாரத்தை தடுப்பதற்காக மத்திய குற்றப் பிரிவில் விபசார தடுப்புப்பிரிவு ஒன்று செயல்படுகிறது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் விபசார தடுப்புபிரிவு உதவி கமிஷனர் கணபதி தலைமையில் போலீசார் அடிக்கடி சென்னை முழுவதும் அதிரடி வேட்டை நடத்துகிறார்கள். இதன் பயனாக விபசாரத்தில் தள்ளப்படும் பெண்கள் மீட்கப்படுகிறார்கள்.
சென்னையில் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் இத்தொழிலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளது மிக மிக குறைவே. வெளிமாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை புரோக்கர்கள் ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதே அதிகமாக உள்ளது.
சமீபகாலமாக வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ரெயில், விமானம் மூலம் வரும் இந்த பெண்கள் சென்னையில் உள்ள நூற்றுக்கணக்கான புரோக்கர்களிடம் தனி தனியாக பிரித்து ஒப்படைக்கப்படுகிறார்கள்.
உதாரணத்துக்கு ஒரு புரோக்கர் வசம் இருக்கும் 10 பெண்கள் ஒரு மாதம் கழித்து வேறொரு புரோக்கரிடம் சென்று விடுவார். இந்த முறையில் வெளிமாநில பெண்கள் சென்னை முழுக்க தங்க வைக்கப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
நேற்று சென்னை கே.கே.நகர் 69–வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண்களை வைத்து ஒரு கும்பல் விபசாரம் செய்வதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அசாம், நாகலாந்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களை மீட்ட போலீசார் மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இவர்களை விபசாரத்தில் ஈடுபத்திய நாகலாந்தை சேர்ந்த புரோக்கர் குரோம், ஆல்வின் எபனேசர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் குரோம் பிரபலமான விபசார புரோக்கர் ஆவார்.
வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தபடி குரோம் விபசார தொழில் செய்தது தெரிகிறது.
இதற்கிடையே அடையார் பரமேசுவரிநகர் முதல் தெருவில் சொகுசு பங்களாவில் விபசார தொழில் செய்து வந்த பெண் புரோக்கர் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்தும் 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
இந்த ஆண்டு கடந்த 4 மாதங்களில் மட்டும் 58 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. 98 விபசார புரோக்கர்கள் சிக்கியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 125 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இப்படி மீட்கப்படும் பெண்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி மருத்துவ பரிசோதனை செய்வார்கள்.
பிறகு அந்த பெண்களின் பெற்றோரை கண்டுபிடித்து ஒப்படைப்பார்கள் என்றாலும் பல பெண்கள் மீண்டும் மீண்டும் இதே தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.
No comments: