Header Ads

தவறாக நடக்க முயன்றதால் காங். தொண்டரை தாக்கிய நக்மா

நடிகை நக்மா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். நடிகை என்பதால் அவரை பார்க்க ஏராளமான கூட்டம் கூடுகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றுகிறார்கள்.

ஆனால் கூட்டத்தைப் பயன்படுத்தி சில விஷமிகள் சில்மிஷத்தில் ஈடுபடவும் முயற்சி செய்கிறார்கள். 2 நாட்களுக்கு முன் நக்மா பிரசாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜ்ராஜ் சர்மி திடீர் என்று நக்மா கன்னத்தில் முத்தமிட்டார். இது கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. நக்மா சமாளித்துக் கொண்டு பிரசாரத்தை தொடர்ந்தார்.

இந்த நிலையில் நேற்றும் நக்மாவுக்கு தொண்டர் ஒருவரால் அசவுகரியம் ஏற்பட்டது. நேற்று அவர் மீரட் நகரில் காங்கிரஸ் தொண்டர்களுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார்.

நக்மா நடந்தே சென்றதால் தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். அனைவரும் நக்மா அருகில் முண்டியடித்துச் சென்றனர். அப்போது ஒரு தொண்டர் கூட்டத்தைப் பயன்படுத்தி நக்மாவிடம் சில்மிஷம் செய்து தகாத முறையில் நடக்க முயன்றார்.

இதனால் நக்மா ஆவேசம் அடைந்தார். சில்மிஷம் செய்தது யார் என்று தெரியாத நிலையில் தனக்கு முன் இருந்த ஒரு தொண்டரை கன்னத்தில் ஓங்கி அரைந்தார். பின்னர் பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு காரில் ஏறிச் சென்று விட்டார்.

இது பற்றி மீரட் காங்கிரஸ் தலைவர் சலிம் பாரதி கூறுகையில், நக்மா போட்டியிடுவதால் தொண்டர்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஏராளமான அளவில் கூடுகிறார்கள். கூட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான் என்றார்.

இநத சம்பவத்தால் நக்மா அதிர்ச்சியுடன் காணப்பட்டார். அவர் கூறும் போது, கூட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான் என்றாலும் இனி இது போன்ற சம்பவம் நடந்தால் மீரட்டுக்கு திரும்பவும் வரமாட்டேன் என்று ஆவேசத்துடன் கூறினார்.

No comments:

Powered by Blogger.