Header Ads

விஜயகாந்த் இன்று சிங்கப்பூர் பயணம்

தே.மு.தி.க. தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலேசியா சென்றார். அங்கு தனது நெருங்கிய நண்பர்களுடன், பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், தமிழகம் திரும்பிய அவர், சமீபத்தில் உளுந்தூர்பேட்டையில் கட்சியின் மாநில மாநாட்டை நடத்தினார். அதன்பின்னர், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணலையும் நடத்தினார். 

தே.மு.தி.க. தரப்பில் தற்போது கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. நேற்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, பார்வர்டு பிளாக் தலைவர் சந்தானம், சமூக சமத்துவப்படை தலைவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சிங்கப்பூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் மனைவி பிரேமலதாவும் செல்கிறார்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, மீண்டும் நண்பர்களை அவர் சந்தித்து ஆலோசிக்கலாம் என்று கூறப்பட்டாலும், விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Powered by Blogger.