Header Ads

ஆஹா கல்யாணம் பட விமர்சனம்..

நடிகர் : நானிநடிகை : வாணி கபூர்இயக்குனர் : கோகுல் கிருஷ்ணாஇசை : தரண் குமார்ஓளிப்பதிவு : லோகநாதன் ஸ்ரீனிவாசன்
சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு ஜாலியாக நண்பர்களோடு ஊர் சுற்றி வருகிறார் நானி. ஒருநாள் தனது விடுதி நண்பர்களோடு ஓசி சாப்பாடு சாப்பிடுவதற்காக திருமண விழாவிற்கு செல்கிறார். அங்கு அந்த விழாவின் அமைப்பாளரிடம் உதவியாளராக இருக்கும் நாயகி வாணி கபூரிடம் மாட்டிக்கொள்கிறார். இவர்களுடைய முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. இதிலிருந்து வாணி மீது காதல் வயப்படுகிறார் நானி.

கல்லூரியில் படித்துக் கொண்டு பார்ட்டைமாக வேலை செய்யும் வாணியின் முழு விவரத்தை தெரிந்துகொண்ட நானி, அவரை பஸ்ஸில் சந்திக்கிறார். அப்போது காதலை சொல்ல முயற்சி செய்யும் நானியிடம், எனக்கு காதல், கல்யாணத்துக்கெல்லாம் டைம் இல்லை, நான் படிப்பை முடித்து விட்டு கெட்டி மேளம் என்னும் வெட்டிங் பிளான் பிசினஸ் செய்யப்போகிறேன் என்று கூறுகிறார். வாணியின் மீது உள்ள அன்பால் அவருடன் நட்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பார்ட்னராக என்னை சேர்த்துக்கொள் என்று நானி கேட்க, அதற்கு பைனான்ஸும், ரொமான்ஸும் வேறு என்று சொல்லி, நீ என்னிடம் வேற எதையும் முயற்சி செய்ய கூடாது என்று கட்டளை போட்டு பார்ட்னராக சேர்த்துக் கொள்கிறார்.

இதற்கு முதலில் பெரிய வெட்டிங் பிளான் செய்யும் சிம்ரனிடம் உதவியாளராக சேர்கிறார்கள். பிறகு சிம்ரனிடம் ஏற்படும் பிரச்சனையால் தனியாக வெட்டிங் பிளான் செய்ய திட்டம் தீட்டி கெட்டி மேளம் என்னும் வெட்டிங் பிளானை உருவாக்குகிறார்கள். 

முதலில் சிறு பட்ஜெட்டில் திருமணம் செய்பவர்களை அணுகி அவர்கள் மூலம் வளர்கிறார்கள். சின்ன திருமணத்தில் ஆரம்பிக்கும் இவர்கள் இருவரும் படிப்படியாக நிறைய திருமணங்களை நடத்தி முன்னுக்கு வருகிறார்கள். இவர்களின் பெரிய ஆசையான பெரிய பட்ஜெட் திருமணம் வாய்ப்பு கிடைத்து அதை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார்கள். இதன் வெற்றி கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் நானியும், வாணியும் எல்லையை மீறி ஒன்றாக கலந்து விடுகிறார்கள். 

அதன்பின் வாணிக்கு நானி மீது இருக்கும் காதல் புரிகிறது. நானியிடம் காதலைச் சொல்ல வரும்போது, ஒரு தவறான புரிதலால் இருவருக்கும் உள்ள ஈகோவால் பிரிகிறார்கள். 

இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? கெட்டி மேளம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

சக்தி என்னும் கதாபாத்திரத்தில் வரும் நானி, துறுதுறு என்று படம் முழுக்க காமெடி கலந்த நடிப்பில் வலம் வருகிறார். குறிப்பாக கிளைமாக்சில் வாணியுடன் பேச துடிக்கும் இவருடைய நடிப்பு ரசிக்கும் படியாக இருக்கிறது. 

ஸ்ருதியாக வரும் வாணிகபூர் நடிப்பு, நடனம், கோபம், கிளாமர் என அனைத்திலும் அசத்துகிறார். இவர் புடவை அணிந்து வரும் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. பல நடிகைகளுக்கு போட்டியாக வருவார் என நம்பலாம்.

நானிக்கும், வாணிக்கும் இடையேயான காதல் காட்சிகள், சிறுசிறு சண்டை காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. சிம்ரன், படவா கோபி, பார்த்தசாரதி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார்கள்.

தரண் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். லோகநாதன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். படம் முழுக்க கலர்புல்லாக காட்சி அளித்து நம் கண்களுக்கு விருந்து அளித்திருக்கிறார். பாடல் காட்சிகளை ஒளிப்பதிவு செய்த விதமும் அருமை. 

இயக்குனர் கோகுல் கிருஷ்ணா, வித்தியாசமான திரைக்கதையை அமைத்து அதில் வெற்றி பெற்றுருக்கிறார். அனைத்து  கலாச்சார திருமணங்களையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனரை மிகவும் பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘ஆஹா கல்யாணம்’ கலர்புல் கலாட்டா கல்யாணம்.

No comments:

Powered by Blogger.