Header Ads

தொழில் அதிபர் மீதான புகாரை வாபஸ் வாங்கவில்லை: நடிகை ராதா மீண்டும் அதிரடி பல்டி

சுந்தரா டிராவல்ஸ் படத்தின் கதாநாயகி நடிகை ராதா சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறார். அவர் சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் தொழில் அதிபர் பைசூல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். தொழில் அதிபர் பைசூல், தன்னோடு 6 ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினார் என்றும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும், ரூ.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து விட்டார் என்றும் புகாரில் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தொழில் அதிபர் பைசூல் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் 3 முறை கோர்ட்டில் ரத்து செய்யப்பட்டது. அவரை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நடிகை ராதா திடீரென்று, வடபழனி போலீஸ் நிலையத்திற்கு சென்று, தான் கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். தான் மீண்டும் தனது கணவர் தொழில் அதிபர் பைசூலுடன் வாழப்போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று நடிகை ராதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புதிய புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில், பைசூல் மீது கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெறவில்லை என்றும், தன்னை கடத்திச்சென்று, மகாபலிபுரத்தில் ஒரு லாட்ஜில் சிறை வைத்து அடித்து துன்புறுத்தி, மிரட்டியதால் புகாரை வாபஸ் பெற்றேன் என்றும், பைசூல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் திடீரென்று இதுபோல் அதிரடி பல்டி அடித்து மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளது, போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் நின்றுகொண்டே இருந்தார். இந்த விஷயத்தில் அடுத்தகட்டமாக உயர் போலீஸ் அதிகாரிகளை கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வடபழனி போலீசார் கூறினார்கள்.

No comments:

Powered by Blogger.